![]() |
சமூக வலைத்தளங்கள் மற்றும் வெவ்வேறு தொடர்பாடல் வலைப்பின்னல்களின் ஊடாக அறிமுகமாகும் மோசடிக்கார காதலர்கள் மற்றும் நெருக்கமான சிநேகிதர்கள், பெண்களை இலக்குவைத்து பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடிச் சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
இந்நிலையைக் கருத்திற்கொண்டு, பெண்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக பெண்களை இலக்குவைத்து பாலியல் துஷ்பிரயோகம் , பண மோசடி மற்றும் தனிப்பட்ட சொத்துக்களை திருட்டு போன்ற பல சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிலும் பதிவாகியுள்ளன. அத்துடன், பெண்களுக்கு போதைப்பொருள் கலந்த உணவு அல்லது பானங்களை வழங்கி, அவர்களை மயக்கமடையச் செய்து பாலியல் துஷ்பிராயகம் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
திருமண ஆசை வார்த்தைகளைக் கூறி பெண்களின் நம்பிக்கையைப் பெற்று, பின்னர் ஏமாற்றிப் பணம் மற்றும் நகைகளைப் பறிக்கும் சம்பவங்களும், சில சந்தர்ப்பங்களில் கொலை போன்ற பாரிய குற்றங்களாக மாறியுள்ளமையையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இது குறித்து பொலிஸ் மா அதிபர் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், சிவில் உத்தியோகத்தர் மற்றும் சமூக பொலிஸ் குழுக்கள் ஊடாக புலனாய்வுத் தகவல்களைத் திரட்டி, இத்தகைய அச்சுறுத்தல்களைக் கண்காணிக்குமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகும் அந்நியர்களிடம் அதிக நம்பிக்கை வைக்கக் கூடாது எனவும், அவர்களுக்குப் பணம் மற்றும் நகைகளை வழங்குவதைத் தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் அடையாளம் தெரியாத நபர்களுடன் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும், தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கி கணக்கு விபரங்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மூலம் விடுக்கப்படும் சந்திப்புக்கான அழைப்புகளை நிராகரிக்குமாறு சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கோ முறைபாடளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், அவசர உதவி மற்றும் உடனடித் தொடர்புகளுக்காக 118, 119, 107 மற்றும் 109 ஆகிய இலக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




.jpg)








