சுரேஷ் சலே கைது: கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்று சத்தியாகிரக போராட்டம்.


விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவும், அரசியல் பழிவாங்களுக்காகவும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை (8) காலை 10 மணிக்கு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம்.

நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தின் மீது பற்றுள்ளவர்கள் எமது சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, சரத் வீரசேகர, விமல் வீரவன்ச மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குறிப்பிடுகையில், முப்பது வருடங்களுக்கும் மேலாக நீடித்த கொடூரமான பயங்கரவாத யுத்தத்தின் காரணமாக இந்த நாட்டிற்கு இழக்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று எங்களால் இறுதியாகக் கணக்கிடப்பட்ட ஒரு இலக்கம் இல்லை.முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

ஒட்டுமொத்த மக்களும் நன்றிக்கடன்பட்டுள்ள வேளையின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஸ் சலே கைது செய்யப்பட்டு ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் அவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்இ அங்கு ஒரு சாதாரண சூழ்நிலை நிலவவில்லை. 'கெஹெல்பத்தர பத்மே' (முநாநடடியனனயசய Pயவாஅந) என்பவருக்கு இருக்கும் வசதிகள் சுரேஷ் சலேவுக்கு இல்லை. 'கெஹெல்பத்தர பத்மே' என்பவருக்கு கிடைக்கும் உணவு சுரேஷ் சலேவுக்கு கிடைப்பதில்லை. 'கெஹெல்பத்தர பத்மே' என்பவருக்கு வழங்கப்படும் கவனிப்பு சுரேஷ் சலேவுக்கு கிடைப்பதில்லை.

சுரேஷ் சலேவை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த மக்களுக்கும் உண்டு. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் உண்மையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் அரசாங்கம் குண்டுத்தாரிகளின் தந்தையான இப்ராஹிமை முறையாக விசாரிக்க வேண்டும் அப்போது உண்மை வெளிவரும். சுரேஷ் சலேவுக்காக இன்று காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிடுகையில், விடுதலை புலிகள் அமைப்பின் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கம் மற்றும் விருப்பு, வெறுப்புகளுக்காகவே அரசாங்கம் செயற்படுகிறது. வடக்கில் புலிகள் அமைப்பின் நினைவேந்தல் அரச ஆதரவுடன் கொண்டாடப்படுகிறது.

அரச நிகழ்வுகளில் இராணுவத்தினருக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை. இராணுவத்தினர் திட்டமிட்ட வகையில் பழிவாங்கப்படுகிறார்கள்.ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும் அரசியல் நோக்கங்களுக்காக விசாரணைகள் திசைத்திருப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்களுக்காகவும், புலிகள் அமைப்பின் நோக்கத்துக்காகவும் சுரேஸ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.அவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுக்கு உண்டு. நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தின் மீது பற்றுள்ளவர்கள் எமது சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றார்.

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிடுகையில், அரசியல் பழிவாங்களுக்காகவே சுரேஸ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சுரேஸ் சலேவை பாதுகாக்க வேண்டும். அவருக்காக நாங்கள் போராடுவோம் எமது போராட்டத்தில் நாட்டு மக்களும் பங்குப்பற்ற வேண்டும் என்றார்.

சர்வஜன சக்தி கட்சியின் உப தலைவர் சன்ன ஜயசுமன குறிப்பிடுகையில், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் நாட்டுக்காக சேவையாற்றிய சுரேஸ் சலே சிறையில் அரசியல் பழிவாங்களுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சுரேஸ் சலேவுக்காக அனைத்து இன மக்களும் குரல் கொடுக்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விசாரணைகள் என்ற பெயரில் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே சுரேஸ் சலேவுக்கு நியாயம் கிடைக்கும்வரை போராடுவோம் என்றார்.