ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை உறுதி செய்த கொழும்பு மேல் நீதிமன்றம்


 இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் புஜ்ய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (23) உறுதி செய்துள்ளது.

இந்த சிறைத்தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையிலும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்டதாகக் கூறி, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணைக்கு பின்னர், இந்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு இந்த 9 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.