
கல்வித் துறை சார்ந்த தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி விவகாரங்கள் குறித்த பாராளுமன்ற அமைச்சரவை ஆலோசனைக் குழு, பிரதமர் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இக்கூட்டத்தின் போது, கல்வித் துறையில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
இதற்கமைய, ஆரம்பப் பாடசாலைகளை (Primary Schools) அமைக்கும் போது தரநிலைகளுக்கு ஏற்றவாறு பொதுவானதொரு வரைபடம் மற்றும் மாதிரியை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம், உதவி பெறும் பாடசாலைகளின் (Assisted Schools) நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள், ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைகள், மாகாண மட்டத்தில் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம், தொழிற்கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இக்குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த விடயங்கள் தொடர்பாக பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்னர், தேவையான தகுந்த நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இதற்கு மேலதிகமாக, இந்த அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் கீழ் நிறுவப்பட்டுள்ள துணைக் குழுக்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.



.jpg)








