சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிப்பு.


தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் சமர்ப்பித்த பிரேரணை ஒன்றின் ஊடாகவே இந்த விடயம் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களின் காவலில் இருந்த சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக நேற்று (07) இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், இதுவரையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அங்கு தனக்கு மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதைகள் செய்யப்படுவதாகக் கூறி, குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்திற்குள்ளேயே அவர் உணவை தவிர்த்து உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்தே, அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.