பலத்த காற்று காரணமாக இரு கடற்பரப்புகளுக்கு 'அம்பர்' எச்சரிக்கை


அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' நிற எச்சரிக்கை அறிவித்தல் விடுத்துள்ளது.

புதன்கிழமை (29) வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், வியாழக்கிழமை (30) காலை 11.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அவ்வப்போது வெளியிடப்படும் எதிர்கால எச்சரிக்கை அறிவித்தல்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.