சிறைச்சாலை நெரிசல் குறித்து நாமல் கவலைப்படுவது நியாயமானது ஆனால் அரசின் நடவடிக்கைகள் குறித்து கூறுவது தவறு - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல !



சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடி மற்றும் போதிய வசதிகள் இன்மை குறித்து நாமல் ராஜபக்ச கவலைப்படுவது நியாயமானது என்றும், அவர் அவ்வாறு புலம்புவதில் தவறில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்க பாதாளக் குழுக்கள் முயற்சி செய்கின்றன; ஆனால் அவை வெற்றி பெறாது. நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் நீதியமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாமல் ராஜபக்ச சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன். நீதியமைச்சர் இச்சம்பவம் குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்” என்றார்.

மேலும் பாதாளக் குழுக்களுடனான தொடர்பு குறித்துக் குறிப்பிட்ட அவர், “பாதாளக் குழுக்கள் என்று பேசும்போதெல்லாம் ராஜபக்ச குடும்பத்தினரின் தொடர்பு ஏதோ ஒரு வகையில் வெளிப்படுகிறது. முன்னொருமுறை தங்காலை சிறைச்சாலை கலவரத்தின் போது, மஹிந்த ராஜபக்ச நேரடியாகச் சென்று ஜூலம்பிட்டியே அமரேவை அழைத்துப் பேசியே கலவரத்தை நிறுத்தினார். ஆனால் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவ்வாறு எந்தக் குற்றவாளியையும் பெயர் குறிப்பிட்டு அழைத்துச் சென்றிருக்கவில்லை. சிறைச்சாலைகளின் தற்போதைய அவல நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் ராஜபக்ச புலம்புவது எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டால் நியாயமானதே” எனத் தெரிவித்தார்.