கஞ்சிப்பானை இம்ரானின் உறவினர் கொலை - 5 சந்தேகநபர்கள் கைது


திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான 'கஞ்சிபானை இம்ரான்' என்பவரின் நெருங்கிய உறவினராகக் (சித்தப்பா) கருதப்படும் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொஹிதீன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்களை நேற்று (17) திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பிரான்சில் தங்கியுள்ள திட்டமிடப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான 'கூடு அஞ்சு' என்பவரே இந்த கொலையை வழிநடத்தி உள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்வம் தொடர்பாக கொழும்பு வடக்கு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம் காலை மற்றும் நண்பகல் வேளையில் இச்சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, சமீபத்தில் இரத்மலானை பகுதியில் 'கூடு அஞ்சு' என்பவரின் நெருங்கிய சகாவொருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.