ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 25 பேரின் சொத்துக்கள் குறித்து விசாரணை



வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள மற்றும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய 25 பேரின் சொத்துக்கள் குறித்து பரந்த அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் இச் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளும் இதில் அடங்குவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், அவரது மகனின் பெயரில் கொள்முதல் செய்யப்பட்ட பல சொத்துக்களுக்கு எதிராக அண்மையில் தடை உத்தரவுகள் பெறப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கொஸ்கொட சுஜி, ரத்கம விதுர, இரத்மலானை சைமா மற்றும் கஞ்சிப்பானை இம்ரான் போன்ற முக்கிய குற்றவாளிகளுக்குச் சொந்தமான உள்நாட்டு சொத்துக்கள் தொடர்பிலும் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்ட அனைத்துச் சொத்துக்கள் குறித்தும் நீதிமன்றத்தில் செய்திகளைப் பதிவுசெய்து, தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.