ஜனாதிபதி செயலாளர் மீதான குற்றச்சாட்டு ; நடவடிக்கை எடுத்து நேர்மையை நிரூபியுங்கள் – ஜனாதிபதி அநுரவுக்கு நாமல் சவால்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குமாநாயக்க இலங்கை சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய காலத்துடன் தொடர்புடைய விடயம் குறித்து SLPP பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக அண்மையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

ஆகஸ்ட் 22ஆம் திகதி குளியாப்பிட்டியவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, ஊழலை ஒழிப்பது மற்றும் நேர்மையான நிர்வாகத்தை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி தொடர்ச்சியாகப் பேசி வருவதால், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் அதனை நிரூபிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

“ஜனாதிபதி திருடர்களைப் பிடிப்பது குறித்தும் நேர்மையை உறுதிப்படுத்துவது குறித்தும் பேசுகிறார். அதனை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் இதுவாகும். ஜனாதிபதியின் செயலாளர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்,” என அவர் தெரிவித்தார்.

விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.