இறுதிக்கட்டப் போரின் போது ஈழத்தமிழர்களைக் கைவிட்டு, அந்தப்போர் சாட்சியம் இல்லாத போராக மாறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை காரணமாக அமைந்தது. அதேபோன்று மலையக தமிழர்களையும் ஐ.நா. கைவிட்டுவிடக்கூடாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளரிடத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நா.செயலாளரின் நேரடி பிரதிநிதியுமான மார்க் அன்ரே பிரஞ்சேவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் எம்பி மற்றும் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பாரத் அருள்சாமி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை என்ற பெயரில் அரசாங்கம், மலையக தமிழ் மக்களின் காணி உரிமையை மறுக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது. நீர் பிடிப்பு, புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை காலநிலை சார்ந்த காரணங்களைக் காண்பித்து, மலைநாட்டில் தமிழ் மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட காணி உரிமையை மறுக்க அரசாங்கம் முயல்கிறதோ என்ற நியாயமான சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
இயற்கை காலநிலை காரணங்கள் எமக்கும் ஏற்புடையவைதான். ஆனால், மனிதர்கள் இயற்கையோடு இணைந்து எப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். ஒட்டுமொத்த மத்திய மலைநாட்டு மாவட்டங்களில் வாழும் சுமார் முப்பது இலட்சம் மக்களையும் அவ்விடங்களிலிருந்து வெளியேற்ற முடியாது. ஆகவே, ஏனைய அனைத்து இன மக்களுடனும் இணைந்து எமது மக்களும் காணி உரிமைகளைப் பெற்று அங்கேயே வாழ வழிசெய்யப்பட வேண்டும்.
குறிப்பாக நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை ஆகிய மத்திய மலைநாட்டு மாவட்டங்களில் வீதி ஓரங்களில் வீடமைப்பதற்கு காணி வழங்கப்பட வேண்டும். ஏனைய கீழ்நாட்டு பெருந்தோட்ட மாவட்டங்களில் வீதிகளுக்கு அண்மித்த சமவெளிப் பகுதிகளில் காணி வழங்கப்பட வேண்டும். காணி உரிமை இல்லாவிட்டால் எமது குடியுரிமை முழுமை அடையாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இந்த புதிய மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை என்ற யோசனைக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகள் நிதி உதவி செய்வதாக அறிய வந்துள்ளது. இத்தகைய நிதி உதவிகளை நாம் வரவேற்கிறோம். ஆனால், இவை எமது மக்களின் காணி உரிமைக்கு குந்தகமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
மலையக பெருந்தோட்டங்கள் காடாக்கப்பட வேண்டும் என்ற, ஆளும் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த கால கொள்கையை நாம் அறிவோம். அதனை மறைமுகமாக நடைமுறைப்படுத்தும் திட்டமாக இது இருக்குமோ என நாம் கேட்க விரும்புகிறோம்.
எனவே, இதில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகத் தலையீடு செய்து, நியாயத்தை நிலைநாட்டி, மலைநாட்டில் தமிழ் மக்களுக்குக் காணி உரிமையை உறுதிப்படுத்தத் துணைநிற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.




.jpg)
.jpg)
.jpg)



.jpg)
