நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு – ஐ.நா. எழுப்பிய கரிசனங்களுக்கு இலங்கை அரசாங்கம் பதில்



நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான முன்மொழிவு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் எழுப்பியுள்ள கரிசனைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம், குறிப்பிட்ட நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக கொண்டுவரப்படவில்லை என்றும், நீதித்துறையில் மேற்கொள்ளப்படும் விரிவான சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே இது முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் 21ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட ஆறு பக்க பதிலில், வழக்குகள் தேங்கிக் கிடப்பதையும் விசாரணை தாமதங்களையும் குறைத்தல், நீதியை அணுகுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் அனுபவமிக்க நீதித்துறை அதிகாரிகளின் நிபுணத்துவத்தைத் தக்கவைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டே இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் Margaret Satterthwaite, தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளுக்கும் புதிய ஓய்வு வயது நடைமுறைப்படுத்தப்படுவது நீதித்துறையின் சுதந்திரம், அதிகாரப் பிரிப்பு மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை தொடர்பில் கரிசனைகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்திருந்தார்.

22ஆவது திருத்தத்தின் கீழ், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 63இலிருந்து 65 ஆகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் 67 வயதை அடையும்போது அல்லது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ அப்போது ஓய்வு பெற வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கையை 19இலிருந்து 24 ஆக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

தனியாக முன்வைக்கப்பட்டுள்ள நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூலம், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 61இலிருந்து 63 ஆக அதிகரிக்கவும், ஏனைய நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் கட்டாய ஓய்வு வயதை 62 ஆக நிர்ணயிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கையை 110இலிருந்து 120 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சட்டமூலங்களும் ஓகஸ்ட் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு நன்மை ஏற்படுத்துவதற்காக இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளையும் அரசாங்கம் மறுத்துள்ளது. நீதித்துறையின் தற்போதைய கட்டமைப்பை உடனடியாக மாற்றுவதற்கோ அல்லது குறிப்பிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கோ இந்த சட்டமூலங்கள் முன்மொழியப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், ஓய்வு வயது அதிகரிப்பை தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு வழங்காமல் இருப்பது, நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை பதவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் நிலையில் அனுபவமிக்க நீதித்துறை அதிகாரிகளைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்திற்கு முரணாக அமையும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிராக பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் தீர்மானத்தை முன்கூட்டியே கணிக்க அரசாங்கம் முயற்சிக்காது என்றும், உச்ச நீதிமன்றம் வழங்கும் எந்தத் தீர்மானத்தையும் முழுமையாக மதிப்பதாகவும் ஐ.நா.வுக்கு அரசாங்கம் தெரிவித்துள்ளது.