கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம் : தமிழ் - முஸ்லிம் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு காணப்படும் – அமைச்சர் விஜித்த ஹேரத்


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, அரசாங்கத்தின் தலையீட்டுடன் சுமுகமான தீர்வொன்றை பெற்றுத்தந்து, தமிழ், முஸ்லிம் மக்களிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான குழுவினரிடம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் சமூக செயற்பாட்டாளர் முஹம்மட் கபீர் ஆகியோரும் அடங்கிய குழுவினருக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (17) கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது பெண் சுகாதாரப் பணியாளர்கள் தமது மத மற்றும் கலாசார ஆடைகளுடன் கடமையைப் பொறுப்பேற்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு அவர்கள் அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் வலியுறுத்தினர்.

இந்தப் பிரச்சினை கடந்த இரண்டு வாரங்களாக நீடித்துவரும் நிலையில், இச்சம்பவம் கல்முனை பிரதேசத்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பெரும் கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும், நீண்டகாலமாக தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையில் நிலவிவரும் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

மேலும் இவ்விவகாரத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடையும் அபாயம் காணப்படுவதாகவும், எனவே இதனை ஜனாதிபதியின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டுசென்று, சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையிலும் ஜனாதிபதி மட்டத்திலும் கலந்துரையாடி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.