சிறைச்சாலைகளில் ஏற்பட்ட குழப்பங்களின் பின்னணியில் திட்டமிட்ட சதியா? – அமைச்சர் ஆனந்த விஜேபால



நாட்டின் பல சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவாகியுள்ள குழப்ப நிலைமைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தச் சம்பவங்களின் தன்மை மற்றும் அவை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதை கருத்திற்கொண்டு, இதன் பின்னணியில் திட்டமிட்ட சீர்குலைப்பு நடவடிக்கை இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னர் இறுதியான முடிவுகளுக்கு வர முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலைமையை அரசாங்கம் மிகவும் தீவிரமாகக் கருதி, சம்பவங்களின் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கருத்தை நிராகரித்த அமைச்சர், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் சிறைக் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் குறுகியகால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் பலவும் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நீதி அமைச்சரின் தலைமையில் விசேட குழுவொன்றை அமைச்சரவை நியமித்துள்ளதாக ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட தரப்பினரை உள்ளடக்கிய விசேட கலந்துரையாடல் ஒன்றையும் கூட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நிலைமையை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவங்களின் பின்னணி தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.