வத்தளை துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!


கடந்த மாதம் 23ம் திகதி வத்தளை, கதிரான பகுதியிலுள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற சிறுவன் ஒருவனின் பிறந்தநாள் விழாவின் போது, நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பள்ளியாவத்தை - கதிரான பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், காரில் வந்த குழுவொன்றினால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாண வடபிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (07) இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் மற்றும் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தலைமறைவாக இருப்பதற்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஜிந்துப்பிட்டி, மாத்தளை மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26, 35 மற்றும் 36 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

"மட்டக்கடைக்கூளி கூடு ரொஷான்" எனப்படும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரைக் இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இலக்கு தவறியதால், அருகில் நின்றிருந்த வேறொரு நபர் மீது துப்பாக்கிதாரி தவறுதலாகச் சுட்டதில் அவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட மேலும் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.