பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து பேருந்து ‘பந்தயம்’ – ஓட்டுநர்கள் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை!


பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பந்தயத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்களுக்கு சிக்கல் கண்டியிலிருந்து ஹட்டன் வரை பயணித்த இரு தனியார் பேருந்துகள் கினிகத்தேனை, பேரகொல்ல பகுதியில் ஆபத்தான முறையில் ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (15) இடம்பெற்ற இவ்விபத்தில் பேருந்துகள் இரண்டிலும் பயணித்த பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ஆனால் பேருந்துகள் இரண்டும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அலட்சியமாக அதிவேகத்தில் பேருந்துகளைச் செலுத்திய ஓட்டுநர்கள் இருவரையும் நாளை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், இரு பேருந்துகளும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதாலும், மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்களின் ஓட்டுநர்கள் அவதானத்துடன் மெதுவாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில், இந்த ஓட்டுநர்கள் அலட்சியமாகவும் கவனக் குறைவாகவும் பேருந்துகளைச் செலுத்தியதால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.