
கல்முனை - வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிலவிய நிர்வாக ரீதியான பிரச்சினையை சுயலாப நோக்கத்தில் அரசியல் ரீதியான பிரச்சினையாக மாற்றி இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் முயற்சிக்கின்றார்கள். சுகாதார அமைச்சர் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
அண்மைக்காலமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சீருடை தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படாவிட்டாலும் தற்காலிக தீர்வொன்றாவது வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு நன்றி கூறிக்கொள்கின்றோம்.
சீருடை அல்லது அபாயா அணியும் விடயத்தில் சில வங்குரோத்து அரசியல்வாதிகள், இந்த நாட்டில் ஆட்சியை மாற்றவேண்டும் என்று செயற்படுகின்ற சில அரசியல்வாதிகள் இனங்களுக்கு இடையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இது தொடர்பான சர்ச்சையான நிலைமை ஏற்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இதனை தமிழ் முஸ்லிம் உறவுகளை பிரிக்கின்ற செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
நிர்வாக ரீதியான பிரச்சினையை அரசியல் ரீதியான பிரச்சினையாக மாற்றி தங்களது சுயலாபத்துக்காக தங்களின் வங்குரோத்து நிலையை முன்னிறுத்தி நடக்க வேண்டும் என்பதற்காக இரு சமூகங்களுக்கு இடையே அந்த பிரிவினைவாதத்தை ஏற்படுத்தினர். இது கவலைக்குரிய விடயம்.
மூன்று சமூகங்களையும் ஒன்றிணைத்து அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுப்போம் என்றே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது கூறியது. ஆனால் சில விடயங்களில் சட்டம் என்ன சொல்கின்றதோ அதனை செயற்படுத்த வேண்டும்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் சுகுணன் இந்த விடயங்கள் நடக்கும்போது அங்கிருக்கவில்லை. அவருக்கு பின்னால் இருந்தவர்கள் அந்த சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சட்டம் அனைவருக்கும் சமம். அத்துடன் அங்கிருந்த வைத்தியசாலை குழுவும் சட்டத்தை அமுல்படுத்தும் கருத்தையே கூறியிருந்தது. இதனை விடுத்து இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறவில்லை.
வைத்தியசாலைகளில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள் போன்றோருக்கு என்று உடைகள் உள்ளன. அவர்கள் தமது கலாசார உடைகளை அணிந்து வர முடியும். இதில் எந்த தடையும் கிடையாது. சுகாதார ஊழியர்கள் அபாயா அணிந்து வந்த விடயத்தில் வைத்தியசாலை எடுத்த முடிவானது சட்டத்துக்கமைய எடுத்த முடிவு. சுற்று நிருபத்தின்படி அவர்கள் அந்த முடிவை எடுக்கின்றனர். அமைச்சரே இந்த விடயத்தில் முடிவெடுக்க வேண்டும். இதன்படி அமைச்சு அந்த பணியை செய்துள்ளது என்று கூறலாம் என்றார்.




.jpg)



.jpg)


