நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை – இரத்மலானை சுப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.5 இலட்சம் அபராதம்


அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி / பால் பொன்னி அரிசியை விற்பனை செய்த இரத்மலானையிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரத்மலானை, காலி வீதியில் Belta Super Mart என்ற பெயரில் இயங்கும் Beliatta Exim Holdings (Pvt) Ltd நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

அதிகபட்ச சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு 255 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சுப்பர் மார்க்கெட் அதனை 270 ரூபாவுக்கு விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிமன்றம் 500,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் கீரி பொன்னி அல்லது பால் பொன்னி GR 11 அரிசிக்கான கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 255 ரூபாவாக 2025 ஒக்டோபர் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.