அநுராதபுர பேரணியில் மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்பார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ


இலங்கை பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணி எக்காரணத்தைக் கொண்டும் நடத்தப்படும் எனவும், அந்த மேடைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வருகை தரவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும் இலங்கை பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டுத் தலைவருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மக்கள் பேரணியில் கலந்து கொண்டாலும், அவர் பொது மேடையில் ஏறி மக்களிடையே உரையாற்றுவதைத் தவிர்த்துவிட்டு, மேடைக்கு முன்னால் உள்ள மக்கள் மத்தியில் அல்லது வேறு அமர்வில் இருந்து கொண்டு பேரணியில் கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இலஞ்ச ஊழல் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இலங்கை பொதுஜன பெரமுன இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.