இலங்கைத் தொழிலாளருக்கு மரண தண்டனை என தகவல் – கருணை காட்டுமாறு சவூதி அரேபியாவிடம் சஜித் கோரிக்கை


சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு கருணை காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவூதி அரேபிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச, “ஒரு வார்த்தைக்காக ஒருவரின் உயிரைப் பறிக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டதுடன், மன்னிப்பு வழங்குவதற்கான வாய்ப்பை திறந்துவைக்குமாறும் சவூதி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு மதத்தை, அவமதிப்பாகக் கருதப்படும் ஒரு வார்த்தையால் சிறுமைப்படுத்த முடியாது எனத் தெரிவித்த அவர், ஒரு வார்த்தைக்குப் பதிலாக ஒருவரின் உயிரைப் பறிப்பதில் அந்த மதத்தின் வலிமை தங்கியிருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒவ்வொரு மகத்தான மதத்தின் இதயத்திலும் இருக்கும் கருணையை” சவூதி அரேபியா வெளிப்படுத்தும் என தான் நம்புவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியிலேயே சஜித் பிரேமதாச இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.