“எனது மகனை உயிருடன் மீட்டுத் தாருங்கள்” - இலங்கை அரசாங்கத்திடம் அனோஜனின் தாயாரின் கண்ணீருடன் கோரிக்கை


( பாறுக் ஷிஹான்)

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை அரசாங்கத்திடம்  உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த அனோஜன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ் வழக்கு தொடர்பில் ஆரம்பத்தில் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனோஜன் சார்பில் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த சவூதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இத் தீர்ப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அனோஜனின் தாயார், "எனது மகன் செய்தது தவறுதான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் எனது தங்க மகனை மன்னித்து, உயிருடன் மீட்டுத் தாருங்கள்" எனக் கண்ணீர்மல்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.