தென்கிழக்கு பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தை திருக்கோவிலில் அமைக்கலாம் – கோடீஸ்வரன் MP



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தை திருக்கோவில் பகுதியில் அமைக்க முடியும். அதற்கான காணிகள் அந்தப் பகுதியில் உள்ளன என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற அமர்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அ எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவினால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாக இந்த பிரேரணை அமைந்துள்ளது. இந்த நாட்டைவிட்டு 1300க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதனால் இந்த நாட்டில் வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதனால் நாங்கள் புதிய மருத்துவ பீடங்களை உருவாக்க வேண்டும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடத்தை நிறுவுகின்ற போது, அதற்கான வைத்தியசாலையை உருவாக்குவதற்காக கல்முனை வடக்கு வைத்தியசாலையை பயன்படுத்த முடியும். அத்துடன் மருத்துவ பீடத்தை திருக்கோவில் பகுதியில் உருவாக்க முடியும். அதற்கான இடங்கள் அங்கே இருக்கின்றன. திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை தரமுயர்த்தி போதனா வைத்தியசாலையாக மாற்ற முடியும் என்றார்.