அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவசர சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மேல்முறையீட்டு நடைமுறையை வெளிவிவகார அமைச்சு கையாண்ட விதம் தொடர்பில் அரசாங்கத்திடம் பதில்களை கோரும் நோக்கில், இந்த விவகாரத்தை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பவுள்ளதாக சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.
அனோஜன் ஆரம்பத்தில் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்தினால், முகநூல் பதிவொன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்தார்.
மேன்முறையீடு செய்ய 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க முடியும் என வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு குடும்பத்தினருக்கு அறிவித்திருந்தது. அதேவேளை, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் பெற்றிருந்த சட்ட ஆலோசனையில், இந்தத் தீர்ப்பை வெற்றிகரமாக மேல்முறையீடு செய்வதற்கான அல்லது தண்டனையைக் குறைப்பதற்கான வாய்ப்பு 'மிகவும் குறைவு' என மதிப்பிடப்பட்டிருந்தது.
குடும்பத்தினரின் கருத்துப்படி, மதத் தலைவர்கள் அசல் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாமல், மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை தனியாக முன்னெடுத்து வந்தனர். எனினும், குடும்பத்தினர் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திராவை சந்தித்ததன் பின்னர் வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் அவர்கள் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சட்டச் செலவுகளுக்காக கோரப்பட்ட 1,890,766 ரூபா தொகையை வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் குடும்பத்தினர் செலுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் அமைச்சினால் வழங்கப்பட்ட ஆவணங்களின்படி, 24 ஆகஸ்ட் 2026 ஆம் திகதியன்று மேல்முறையீட்டு மனுவின் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், குடும்பத்தினர் முன்னதாகவே மேல்முறையீடு செய்யுமாறு கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ள நிலையில், அமைச்சினால் அந்த மேல்முறையீட்டு ஆவணம் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்ட கடிதம் 16 செப்டெம்பர் 2026 எனத் திகதியிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டில் அட்டர்னி அட்லான் அப்துல்லா அல்-சுபை சட்டத்தரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார். இருப்பினும், குடும்பத்தினரின் கருத்துப்படி, நீதிமன்றத்தில் உண்மையில் வேறொரு சட்டத்தரணியே முன்னிலையாகியுள்ளார். அந்த சட்டத்தரணியின் பெயர் அல்லது தொடர்பு விபரங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து குடும்பத்தினர் மேல்முறையீடு செய்ய முன்வந்ததுடன், கோரப்பட்ட சட்டச் செலவையும் செலுத்தியுள்ள நிலையில், மேல்முறையீட்டைத் தொடர்ந்து அமைச்சின் பொறுப்பு தொடர்பில் இந்தச் சூழ்நிலைகள் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன என சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
தூதரகத்தின் சொந்த சட்ட ஆலோசனையில் வெற்றிகரமான மேல்முறையீட்டுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என மதிப்பிடப்பட்டிருந்தபோதும், குடும்பத்தினருக்கு மேல்முறையீடு செய்யுமாறு ஏன் ஆலோசனை வழங்கப்பட்டது?
அதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் தொடர்பில் என்ன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது? நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணியை யார் தேர்ந்தெடுத்தனர் மற்றும் அவருக்கு யார் அறிவுறுத்தல் வழங்கினர்?
தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் மேல்முறையீட்டு ஆவணங்கள் மற்றும் சட்டத்தரணியின் விபரங்கள் குடும்பத்தினருக்கு ஏன் வழங்கப்படவில்லை? செலுத்தப்பட்ட ரூ. 1,890,766 ரூபா எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?இந்த விடயத்தில் வெளிவிவகார அமைச்சும் இலங்கைத் தூதரகமும் மேற்கொண்டமேற்பார்வை நடவடிக்கைகள் என்ன? இந்தச் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு, அனோஜனின் வழக்கை கையாள்வதில் தூதரக மற்றும் இராஜதந்திர ரீதியான தவறு ஏற்பட்டுள்ளதா என்பதையும் அரசாங்கத்திடம் கேட்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
17 செப்டெம்பர் அன்று வெளியான செய்திகளின்படி, மேல்முறையீட்டின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சவுதி அரேபிய அதிகாரிகளிடமிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ தீர்ப்பு தொடர்பான உறுதிப்படுத்தலை அவசரமாகப் பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனோஜனின் வழக்கை கையாண்ட விதத்தில் பொறுப்பை நிர்ணயிப்பது தொடர்பான விசாரணைகள், அவரது உயிரைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை தாமதப்படுத்தக் கூடாது.முழுமையான நீதிமன்றத் தீர்ப்பையும் வழக்கு நடவடிக்கைகளின் பதிவுகளையும் அவசரமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.அனுபவமிக்க மற்றும் சுயாதீனமான சவுதி சட்டத்தரணி ஒருவரின் சட்ட உதவியை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், கிடைக்கக்கூடிய அனைத்து மேல்முறையீட்டு மற்றும் மறுஆய்வு வழிகளையும் ஆராய்வதுடன், மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு மற்றும் மரண தண்டனையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
வெளிவிவகார அமைச்சர், சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சருடன் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு, தேவையான பட்சத்தில் சவுதி அரேபிய இராச்சியத்தின் பொருத்தமான உயர்மட்டத்தில் தலையீட்டை கோர வேண்டும். இந்த மேல்முறையீடு எவ்வாறு கையாளப்பட்டது என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு பதிலளிக்க வேண்டிய தீவிரமான கேள்விகள் உள்ளன. இந்த விடயங்களை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளேன்.
அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து குடும்பத்தினர் மேல்முறையீடு செய்ய முன்வந்ததுடன், கோரப்பட்ட சட்டச் செலவுகளையும் செலுத்தியுள்ள நிலையில், குடும்பத்தினருக்கு உரிய தகவல்கள் வழங்கப்படுவதையும், அனோஜனுக்கு போதுமான சட்ட உதவி கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இருந்தது.
'எனினும், பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரம் உடனடி முன்னுரிமையை திசைதிருப்பக் கூடாது. ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் தற்போது ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட, இராஜதந்திரஇ தூதரக மற்றும் மனிதாபிமான வழிகளும் தற்போது பயன்படுத்தப்பட வேண்டும். சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான மிக உயர்ந்த மட்டத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.








.jpg)



.jpg)