துலா இராசி அன்பர்களே… 
19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார். உங்கள் இராசிக்கு 3-ம் இடம், 6-ம் இடத்தின் அதிபதியான குரு பகவான், 10-ம் இடத்திற்கு வருவது நன்மையே. அதுவும் உச்சமாக அங்கு அமர்ந்து விடுகிறார். உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்னும் 2-ம் இடமும், சுகஸ்தானம் என்னும் 4-ம் இடமும், ரோகஸ்தானம் என்கிற 6-ஆம் இடத்தையும் குரு பார்வை செய்வதால், அந்த இடங்கள் தீமைகள் குறைந்து நன்மைகள் நடக்க வழி செய்ய  காத்திருக்கிறது. உங்கள் இராசிக்கு 2-ம் இடத்தை குரு பார்வை செய்வதால், பெரும் உதவிகள் தேடி வரும். கைக்கு கை பணம் வரும். பொருளாதர வசதி பெருகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியத்தை பேசியே சாதித்துவிடுவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். சொந்த வாகனம் வாங்கி அமர்க்களமாக நிறுத்துவீர்கள். 

கல்வி உயரும். மேற்படிப்பு, பட்டப்படிப்பு பிரமாதமாக தொடரும். 6-ம் இடத்தை பொறுத்தவரையில் கடன், வழக்கு, ரோகம் இவை அனைத்தும் காணாமல் போய்விடும். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் நடக்கும். வீடு, மனை வாங்கும் யோகமும் அமையும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வர வாய்ப்புள்ளது. 

இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், புத்திர பாக்கியத்தை குருவின் அருளால் கிடைக்கப்பெறுவீர்கள். மனக்குழப்பம் தீரும். சண்டை, சச்சரவு தீரும். பொதுவாக, “பதவி போனவனுக்கு 10-ல் குரு” என்பார்கள். அதை பற்றி துளியளவும் கவலைக்கொள்ளவேண்டாம். காரணம், 3-ம் இடம், 6-ம் இடதின் அதிபதி, கேந்திரத்தில் இருந்தால் யோகத்தையே செய்வார். சோகத்தை கொடுக்க மாட்டார். சரி இவ்வளவு நன்மைகளை செய்யும் குரு பகவான், ஏதாவது பிரச்னையும் தருவாரா? எனக் கேட்டால், ஆம். கூட்டு தொழிலில் கவனமாக இருக்க சொல்கிறார். ஆவேசம், பரபரப்பு அடக்கி வையுங்கள். தேவையில்லா பேச்சு வேண்டாம். சாந்தமாக இருந்தால், சகலமும் உங்கள் வீடு தேடி வரும். ஸ்ரீமகாலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.