பகிடிவதை பாலியல் ரீதியான வன்முறை இம்சை

இலங்கையில் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுமதி பெறுவதற்கு க. பொ. த உயர்தர பரீட்சையில் சிறப்பாக சித்தி பெறுவது அவசியம். ஆனால் அவ்வாறான வாய்ப்பைப் பெறுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்னாலும் மிகையாகாது.

ஏனெனில் வருடாந்தம் சுமார் 3 இலட்சம் மாணவர்கள் க. பொ. த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இவர்களில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் பல்கலைக்கழகம் செல்வதற்கான அடிப்படைத் தகுதியை பெறுகின்றனர். எனினும் சுமார் 25 சதவீத மாணவர்களே பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடிகிறது. அந்த அளவுக்கான வெற்றிடம் மட்டுமே பல்கலைக்கழகங்களில் நிரப்பப்பட முடியும்.

அவ்வாறு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை வசதியுள்ள குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. அதிக பணம் கொடுத்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அவர்கள் இங்கிருந்துகொண்டே பெற்றுக் கொள்ள முடிகிறது. எனினும் கிராமப்புற மாணவர்களுக்கும் அதிக அளவு வசதி இல்லாத மாணவர்களுக்கும் அவர்களது எதிர்காலத்தை வளப்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பாக பல்கலைக்கழக பிரசன்னம் இருந்து வருகிறது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இத்தனை சிரமத்துடன் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களுக்கு முதலாவது பிரச்சினையாக அமைவது அங்கு இடம்பெறும் பகிடிவதையாகும். இந்த பகிடிவதையை அறிமுகப் படலம் என்று கூறலாம். ஆனால் இந்த அறிமுகப் படலம் பெரும்பாலும் உடல் மற்றும் உள ரீதியில் இம்சிக்கும் சித்திரவதையாக அமைந்துள்ளதுதான் வேதனைக்குரியது.

இந்த பகிடிவதை இம்சை இதுவரை 14 பல்கலைக்கழக புதுமுக மாணவர்களின் உயிரை நேரடியாக பறித்திருப்பது பெரும் கவலைக்குரியது. அதேநேரம் பகிடிவதை மறைமுக ரீதியில் மேலும் சில உயிர்களை பறித்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

இப்போது பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை பகிடிவதை என்ற அறிமுகப் படலம் என்று கூறுவதற்கில்லை. அது பாலியல் ரீதியிலான வன்முறை இம்சை என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா கூறுகிறார் என்றால் அது எந்த அளவுக்கு பாரதூரமானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு காலத்தில் பகிடிவதை என்பது பகிடிவதையை செய்பவருக்கும் பகிடிவதை செய்யப்படுபவருக்கும் எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்தாத ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு என்று இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இப்போது அது நினைவில் மட்டுமே உள்ள நிகழ்வாகும். இப்போதைய பகிடிவதை இம்சையுடன் கூடிய ஒரு சித்திரவதையாகும். இதன் போது இடம்பெறும் உடல் ரீதியான இம்சை மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதன் காரணமாக மாணவர்கள் பல்கலைக்கழக படிப்பே வேண்டாம் என்று பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிச் செல்வதும் உண்டு. மற்றும் சிலர் தமது உயர் கற்கைக்காக வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.

பகிடிவதை இவ்வாறான பெயரில் இருக்கும் நிலையில் அரசாங்கம் இதனை ஒரு பாரதூரமான விடயம் என்று கருதுகிறதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

2017/2018 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் 1989 மாணவர்கள் அல்லது பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களில் 6 முதல் 7 சதவீத மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தம்மை பதிவு செய்து கொண்ட பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு செல்லாமலே இருந்துள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் பகிடிவதை இடம்பெறலாம் என்பதால் அவ்வாறு பல்கலைக்கழகங்களுக்கு வரவில்லை என்றும் கூறி விட முடியாது. அவர்களில் சிலர் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைப்பதாலும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பதாலும் சென்று விடுகின்றனர்.

எனினும் இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்கள் பகிடிவதையின் பயம் காரணமாகவே பல்கலைக்கழகங்களுக்கு செல்லவில்லை என்று கூறியிருப்பதும் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மோசமான பகிடிவதை மற்றும் சித்திரவதை பற்றி பெற்றோர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்தும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் ஒவ்வொரு வருடமும் தனக்கு கிடைத்து வருவதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அண்மையில் ஒரு தாயிடம் இருந்து கிடைத்த கடிதத்தில் “எனது மகன் பல்கலைக்கழகத்தில் தனக்கு நேர்ந்த மோசமான பகிடிவதை காரணமாக மீண்டும் அங்கு செல்ல மறுக்கிறார். அந்த அளவுக்கு அந்தச் சம்பவம் காரணமாக அவர் அச்சமடைந்திருக்கிறார். அவரை நிர்வாணமாக்கி அவரது பால் உறுப்புகளை சிதைக்கும் அளவுக்கு மோசமான பகிடிவதை நடந்திருக்கிறது. அது அவருக்கு வலியும் வேதனையும் தருவதாக அவர் கூறுகிறார். இதனால் எனது மகன் மோசமான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக நான் அஞ்சுகிறேன். முழு நாளும் உட்கார்ந்து கொண்டு எங்கோ வெறித்துப் பார்த்தவாறு அவர் இருப்பதை காணும் போது எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது” என்று எழுதப்பட்டுள்ளது.

மற்றும் சில கடிதங்களில் கூறப்பட்டுள்ள விடயங்கள் இதைவிட மோசமாக உள்ளன.

எப்படியும் தனது மகன் கல்வி​ைய முடிப்பதற்கு ஏதேனும் ஒரு ஏற்பாட்டை செய்து தருமாறு மேற்படி கடிதத்தை எழுதிய தாயார் வேண்டியுள்ளார்.

பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அது பற்றி முறைப்பாடு செய்ய அந்த மாணவியின் பெற்​ேறாருக்கு மூன்று வருட காலம் சென்றிருக்கிறது.

ஒருசில விஷமத்தனம் மிகுந்த மாணவர்களின் இவ்வித செயற்பாட்டின் காரணமாக ஒட்டுமொத்த பல்கலைக்கழக முறைமைக்கே களங்கம் ஏற்படுகிறது. இந்த மாணவர்கள் கூட்டம் பல்கலைக்கழகத்தின் சமூக நிகழ்ச்சிகளில் முன்னின்று செயற்பட்டு தம்மை நல்லவர்கள் போல் காட்டிக் கொள்ள முயல்கிறது.

கடந்த வருடம் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் சிரேஷ்ட பல்கலைக்கழக மாணவர்கள் புதிய மாணவர்கள் மீது பாலியல் தொந்தரவு செய்து வந்த போது கையும்மெய்யுமாக அகப்பட்டுக்கொண்டனர். எனினும் இந்த சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியிலேயே நடந்திருக்கிறது.

குறிப்பிட்ட சம்பவம் நடந்த வீடு மாதம் 30 ஆயிரம் ரூபா என்ற ரீதியில் மூன்று மாதங்களுக்கு வாடகைக்கு பெறப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. பகிடிவதையை அவர்கள் எப்படி கிரமமாக தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகின்றனர் என்பது இந்த சம்பவத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது.

பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் மேற்படி பகிடிவதையை ஏற்பாடு செய்த மாணவர்கள் சம்பவத்தின் போது கையும் களவுமாக பிடிபட்டதுடன் பகிடிவதைக்குள்ளான மாணவர்கள் 9 பேரும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். பல்கலைக்கழக மாணவர் சங்கம் இந்த பகிடிவதையில் சம்பந்தப்படவில்லை என்று கூறிய போதும் அவர்கள் கூற்று பற்றி ஊர்ஜிதம் செய்யப்படவில்லை. எனினும் சம்பவத்தில் ஈடுபட்ட 15 மாணவர்கள் பகிடிவதை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 100 நாட்களில் பினையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் அவர்களுக்கு மூன்று வருட பல்கலைக்கழக கல்வித் தடை விதிக்கப்பட்டது.

அதுவரை மிகவும் மோசமான பகிடிவதை சம்பவங்களில் ஈடுபட்ட பேராதனை கலைப்பீடம் மேற்படி மாணவர்கள் கைது மற்றும் கல்வித்தடை காரணமாக ஓரளவு சுமுகமான நிலையில் இருக்கிறது. மேற்படி சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் முன்வந்தமை பல பெற்ேறாரின் பாராட்டை பெற்றுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சில பகிடிவதை சம்பவங்களில் புதிய மாணவர்கள் அடிமைகளை அடக்குதல் போன்ற நிலையில் இருந்துள்ளனர் என்று சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் கூறியுள்ளார். மேற்படி புதிய மாணவர்களை இந்த சம்பவங்கள் உளரீதியாக பெரும் மனஉளைச்சல்களுக்கு ஆளாக்கி இருப்பதுடன் அவர்களது தன்னம்பிக்கையை சிதைத்துள்ளது. இதனால் அவர்கள் வாழ்க்கையில் பாதகமான மனோபாவத்துடனேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட காலத்துக்கு காலில் செருப்பை மட்டுமே அணியச் செய்தல், தொடர்ந்து வெள்ளை ஆடைகளையே உடுத்தச் செய்தல், உள்ளாடைகள் அணிவதை தடுத்து விடுதல், ஒரே உடையை நீண்டநாட்களுக்கு உடுத்தச் செய்தல், கூறும் உத்தரவுகளை பின்பற்றாத மாணவர்களை அச்சுறுத்தல், நூலகம், உணவுச்சாலை ஆகிய இடங்களுக்கு செல்ல அனுமதி மறுத்தல் போன்றவை இவ்வாறான இம்சை பகிடிவதைகளில் சிலவாகும்.

மூன்று மாதங்களுக்கு இவ்வாறான பகிடிவதைகள் இடம்பெறும். தாவித்தாவி குதித்தல் முதல் பின்னிரவில் பாலியல் இம்சைகள் வரையிலான இம்சைகள் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளேயும் வெளியிலும் இடம்பெறும்.

மேற்படி உத்தரவுகள் காதோடுதான் கிசுகிசுக்கப்படும். அதை மீறினால் அடி உதைதான். இந்த இம்சை வதைகளில் இருந்து மாணவிகளும் பிக்கு மாணவர்களும் கூட தப்ப முடியாது. அனைவரும் பகிடிவதைக்கு உள்ளாகத்தான் வேண்டும்.

இவ்வாறான பகிடிவதை இம்சைகளை ஏன் நிறுத்த முடியாது? இதை சொல்வது இலகு. ஆனால் செய்வது கடினம் என்கிறார் பல்லைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர்.

இவ்வாறான மோசமான பகிடிவதையில் ஈடுபடும் மாணவத் தலைவர்கள் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்கின்றனர். இவர்களின் செயற்பாடுகள் அச்சுறுத்தல்கள் சகிதம் இருப்பதால் பெற்​ேறார் பகிடிவதைகளைப் பற்றி முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர்.

அத்துடன் சான்றுகளோ, சாட்சியமோ இல்லாமல் பொலிஸாருக்கு செயற்பட முடியாதுள்ளது. 450 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பகிடிவதைக்கு எதிராக உதவி பீடத்துக்குக் கிடைத்துள்ளன. இதனால் 1998 இல் கொண்டுவரப்பட்ட பகிடிவதை தடைச் சட்டம் வெறும் எழுத்தில் மட்டுமே உள்ளது.

எவ்வாறெனினும் பகிடிவதை எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 40 மாணவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறுகிறார்.

எவ்வாறெனினும் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வன்முறை பகிடிவதை இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுள பெர்னாண்டோ