பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம்!


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம் வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று  திங்கட்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறிய நீர்ப்பாசனம், மானாவாரிக் கண்டங்களின் பயிர்ச்செய்கை, உன்னிச்சைத்திட்டம், வலதுகரை வாய்க்கால், இடதுகரை வாய்க்கால் ஊடான பயிர்ச்செய்கை மற்றும் கால்நடைகளை வெளியேற்றுதல் போன்ற  விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இதன்போது உன்னிச்சைத் திட்டத்தின் கீழ் வலதுகரை வாய்க்கால் விஸ்தீரணம், ஆற்றுப்பாய்ச்சல், இடதுகரை வாய்க்கால் போன்றவற்றில் மொத்தமாக 15,179 ஏக்கரும் சிறிய நீர்ப்பாசனம், மானாவாரிக் கண்டங்களின் பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் 16,051ஏக்கரும்

மொத்தம்  31,438 ஏக்கர் இவ்வருட பெரும்போகச் செய்கைக்கு பொருத்தமானது என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வருட பெரும்போக விவசாய வேலைகள் .2019 செப்ரம்பர் 10 ஆம் திகதி தொடக்கம்  இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன் காப்புறுதி இறுதி திகதி 2019 நவம்பர் 10ம் திகதி எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், விவசாய, கமநல சேவைகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச செயலக அதிகாரிகள், மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.