மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்திலும் பார்க்க சற்று குறைவடைந்துள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜூலை 18 ஆந் திகதி தொடக்கம் 24 ஆந் திகதி வரையும் 12 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 08 டெங்கு நோயாளர்களும், ஏறாவூர், கோரளைப் பத்தி மத்தி, மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 01 நோயாளர்களுமாக மொத்தம் 12 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும் வாகரை, வாளைச்சேனை, செங்கலடி, வவுனதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி மற்றும் கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மேலும் கடந்த சில மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் வே. குணராஜசேகரம் தெரிவித்தார், மொத்தமாக கடந்தவாரம் 12 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஓட்டமாவடி பிரதேச மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் இபருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.