மட்டக்களப்பில் பட்டதாரி பயிலுனர்களுக்கான 3 மாத தலைமைத்துவ விசேட பயிற்சி 5 கட்டங்களாக இன்று முதல் ஆரம்பம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வேலையில்லாப் பட்டதாரிகள் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விசேட திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான 3 மாத தலைமைத்துவ பயிற்சிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி மத்மராஜாவினால் இன்று (14) ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இம்மாவட்டத்தில் 2 ஆயிரத்தி 88 பட்டதாரி பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்ட 1979 பட்டதாரிகளுக்கு தலைமைத்துவம், முகாமைத்துவம், பொதுப்பணித்துறை, தனியார்துறை மற்றும் கருத்திட்ட வேலை போன்ற 5 தலைப்புக்களில் தலா மூன்று வாரங்கள் வீதம் பயிற்சிகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பட்டதாரியும் இவ்வைந்து தலைப்புக்களிலுமான பயிற்சியினைப் பூர்த்தி செய்வது அவசியமாகும்.

கிழக்குப் பல்கலைக்கழக அழகியற் கற்கைப் பிரிவு கல்லடி விபுலானந்தா இசை நடனக்கல்லூரி மண்டபத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன் தலைமையில் நடைபெறும் கருத்திட்ட வேலை தொடர்பான செயலமர்வினையும், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெறும் முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வினையும் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உரையாற்றுகையில், பட்டப்படிப்பினை மேற்கொண்டு பட்டதாரிகளாக வெளியாகியுள்ள தாங்கள் அனைவரும் நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஒரு வேலையினையும் செய்யக்கூடிய திறன் கொண்டவர்கள். தங்களுக்கு வழங்கப்படும் எந்த ஒரு வேலையினையும் திறம்பட செய்யவேண்டும். இங்கு வழங்கப்படும் இப்பயிற்சி நெறியானது உங்களுக்கு வழங்கப்படும் வேலையினை இலகுவாக, திருத்தமாக, வெற்றிகரமாக மேற்கொள்ள உறுதுணையாக இருக்கும். உங்கள் அரச பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினரின் ஏற்பாட்டில் கல்லடி விபுலானந்தா இசை நடனக்கல்லூரி மற்றும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபம் ஆகியவற்றில் இடம்பெற்ற பயிற்சிநெறி ஆரம்பநாள் நிகழ்வுகளில் மேலதிக மாவட்ட செயலாளர் சுதர்சினி ஸ்ரீகாந்த், இராணுவத்தின் 11வது பிரிவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சந்திக எகலபொல, 23 வது படையணி பொது உத்தியோகத்தர் அதிகாரி மேஜர் அபிசேக் கொகன, கிழக்கு பல்கலைக்கழக நுன்கலை பீட பணிப்பாளர் அம்மன்கிளி முருகதாஸ், கிழக்கு பல்கலைக் கழக பிரதிப் பதிவாளர் வே. நவிரதன் மற்றும் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், உதவி பிரதேச செயலாளர். எம்.எஸ். சில்மியா, கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்களன கலாநிதி ஜெயரன்ஜினி சுதா, கலாநிதி பாரதி கெனடி 11இது தொடர்பான இவ்விசேட கலந்துரையடலில் மேலதி அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் உட்பட பயிற்சிகளுக்குப் பொறுப்பான இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.