மட்டக்களப்பில் 40 நாள் குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து 40 நாள் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் நேற்று(15) செவ்வாய்க்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். பிறந்து நாற்பது நாள் கொண்ட பெண் பிள்ளையான கோஷனி என்ற சிசுவே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் சம்பவ தினமான நேற்று செவ்வாய்க்கிழமை வழமைபோல கணவன் வேலைக்கு சென்றிருந்த நிலையில் உறவினர்களுடன் வீட்டில் சிசுவுடன் தாய் இருந்துள்ளதாகவும் மாலை 5.30 மணியளவில் உறவினர்கள் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் குழந்தையுடன் தாய் தனிமையில் இருந்ததாகவும் அப்போது குழந்தையை வீட்டின் அறையில் கட்டிலில் படுக்கவைத்துவிட்டு வீட்டின் கதவை மூடிவிட்டு மலசலகூடத்திற்கு சென்று திரும்பி வந்தபோது கட்டிலில் படுக்கவைத்த குழந்தை காணாமல் போயுள்ளதாகவும் இதனையடுத்து குழந்தையை வீடுமுழுவது தேடிய நிலையில் கணவர் மற்றும் உறவினர்களுக்கு இது தொடர்பாக தெரியப்படுத்திய பின்னர் அவர்களும் தேடிய நிலையில் வீட்டின் முன்பகுதில் அமைந்திருந்த கிணற்றில் உயிரிழந்த நிலையில் குழந்தை இருப்பதை கண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தடயவியல் பிரிவு மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.