உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் உழைப்பும் வியர்வையுமே ‘’பாட்டாளிபுரம்’’ மைதானத்திற்கு உரமாக்கப்பட்டுள்ளது – எம்.உதயகுமார்

(உ.உதயகாந்த்)

மட்டக்களப்பு மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் உழைப்பும் வியர்வையுமே இம் மைதானத்தின் உருவாக்கத்திற்கு உரமாக்கப்பட்டுள்ளது என்று மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பாக அமைக்கப்பட்டுள்ள பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தினை இன்று (26) சனிக்கிழமை வைபவரீதியாக திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விளையாட்டு மைதானமானத்தின் அபிவிருத்திக்காக எந்த ஒரு நபரிடமும் நிதி உதவிகள் கோரப்படாமல் முற்று முழுவதுமாக எமது மாநகர சபை எல்லைக்குட்பட்ட வரியிறுப்பாளர்களின் பணத்திலிருந்து பெற்றுக்கொண்ட இரண்டு மில்லியன் ரூபாய் நிதியினூடாகவே இம்மைதானம் அமைக்கப்பட்டதெனவும் கூறினார்.

அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில் எமது மக்களின் பொழுதுபோக்கிற்கு சகல வழிகளிலும் உகந்த இடமாக இவ்விளையாட்டு மைதானத்தினை மிகவிரைவாக அபிவிருத்திசெய்து தருவதாகவும், மேலும் இன்றிலிருந்து இம்மைதானத்தினை பொது மக்கள், விளையாட்டு கழகங்கள், பாடசாலை மாணவர்கலென அனைவரது பயன்பாட்டிற்குமாக திறந்துவைத்தமையினையிட்டு தான் பெருமகிழ்ச்சியடைவதாகவும் தனது உரையில் கூறினார்.

மேலும் இன்று இவ்விளையாட்டு மைதானத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கென நடத்தப்பட்ட சித்திரை விளையாட்டு விழாவில் அணிக்கு பத்து ஓவர்கள் கொண்ட கிறிக்கற் போட்டியின் இறுதி போட்டி நிகழ்வானது நடைபெற்றதுடன், இப்போட்டியில் ஆணையாளர் தலைமையிலான திடீர் அணியே வெற்றியீட்டியது.

அதனைத் தொடர்ந்து மாலை நேர போட்டிகளாக பாரம்பரிய வினோத விளையாடு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.