ஆலையடிவேம்பில் வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வாழ்வாதார உதவியாக வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (01) காலை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட 11 கிராமசேவகர் பிரிவுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட, கோழி வளர்ப்பைத் தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 150 பயனாளிகளுக்குத் தலா 20 கோழிக்குஞ்சுகள் வீதம் வழங்கிவைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத் திட்டமிடல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பகிர்ந்தளிக்கப்பட்ட குறித்த கோழிக்குஞ்சுகள் திருகோணமலை கால்நடைகள் சுகாதாரத் திணைக்களத்திலிருந்து தருவிக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா ஆகியோருடன் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு பயனாளிகளுக்குக் கோழிக்குஞ்சுகளை வழங்கிவைத்தனர்.