கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவில் "தேசிய போசாக்கு மாதம் ஜீன் - 2016" பிரதேச மட்ட நிகழ்வு நடைபெற்றது...


(கோபி) இந் நிகழ்வானது பிரதேச செயலாளர் செல்வி S.R.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி பிரதேச செயலாளர் செல்வி A.அமலினி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்  திரு.R.கங்காதரன், சுகாதார திணைக்களத்தின் குடும்ப நல மருத்துவ மாது, விவசாயப் போதனாசிரியர், வேள்ட் விஷன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அத்துடன் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வானது கதிரவெளி மற்றும் கல்லரிப்பு பாலர் பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து நடாத்தப்பட்டது. தொடர்ந்து கதிரவெளி கிராம சேவை உத்தியோகத்தர் திரு.S.விஜயராஜன் அவர்களினால் வரவேற்புரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரதேச செயலாளரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வின் பிரதான நோக்கம் "போசாக்கு குறைபாடுடைய பிள்ளைகளின் எதிர்கால நலன், கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றை முன்னேற்றுவது தொடர்பான விழிப்புணர்வு" நிகழ்வாகும்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி கிராம சேவகர் பிரிவில் கூடுதலான போசாக்கு ஆபத்துக்குள்ளான குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனால் இந்நிகழ்வினை இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், மேலும் போசாக்கு தொடர்பான வேலைத்திட்டமானது ஒருவருடத்திற்கு மேலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதுடன் இங்கு இவ்வேலைத்திட்டத்திற்காக பல்வேறு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும் பங்களிப்பு செய்து வருவதாக பிரதேச செயலாளர் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.

தொடர்ந்து போசாக்கு தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை உதவி பிரதேச செயலாளரினாலும், உதவித் திட்டமிடல் பணிப்பாளரினாலும் முன்வைக்கப்பட்டது. இதில் போசாக்கு குறைபாட்டில் மூன்று விடயங்கள் செல்வாக்கு செலுத்துவதாகவும், பிள்ளைகளின் போசாக்கினை முன்னேற்றுவது பெற்றோர்களின் பங்களிப்பில்தான் தங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து குடும்பநல மருத்துவ மாதுவினால் போசாக்கு குறைப்பாட்டிற்கான காரணமும், போசாக்கான உணவு பற்றிய விளக்கங்களும் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் போதனாசிரியரால் சத்துள்ள உணவான கீரைப்பிட்டு மற்றும் நெத்தலி சொதி தயாரிக்கும் முறையினை செயன் முறையின் மூலம் முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்களுக்கு செய்து காட்டப்பட்டதுடன் இந்நிகழ்வில் பிடிகொளுக்கட்டையும், பசுப்பாலும் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.