இலங்கை
சனநாயக சோஷலிசக் குடியரசின் 69ஆவது சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கும்வகையிலான விசேட
நிகழ்வுகளும் காணி உறுதி மற்றும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று
(04) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில்
இடம்பெற்றன.
காலை 8.30
மணிக்கு இடம்பெற்ற தேசியக் கொடியேற்றும் வைபவத்தில் பிரதேச செயலக
உத்தியோகத்தர்களின் பிரசன்னத்துடன் பிரதேச செயலாளர் சுதந்திர இலங்கையின் கௌரவச்
சின்னமான தேசியக்கொடியை ஏற்றிவைத்ததுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தாய்
நாட்டுக்காகத் தமது இன்னுயிரை உவந்த தேசிய வீரர்களுக்கு இரண்டு நிமிட மரியாதையும்
செலுத்தப்பட்டது.
அதன்பின்னர்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கத்துக்கும், நாட்டு
மக்களுக்கும் நல்லாசி வேண்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ
மஹா கணபதி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் பிரதேச செயலாளர் தலைமையில்
அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். குறித்த பூஜை வழிபாடுகளை
ஆலய குரு சிவஸ்ரீ பிருந்துஜன் சர்மா கிரமமாக முன்னெடுத்திருந்தார்.
தொடர்ந்து
பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மத்தியில் சுதந்திர தினச் சிறப்புரையாற்றிய
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், சுதந்திர இலங்கையில் வாழ்ந்துவருகின்ற குடிமக்களாகிய
நாம் ஒவ்வொருவரும் நமது தாய் நாட்டின் அபிவிருத்தியை, அதன் மூலம் நமக்குக்
கிடைக்கும் சுபீட்சமான நல்வாழ்வை கருத்தில்கொண்டு செயற்படவேண்டுமெனக்
குறிப்பிட்டதுடன், அதற்காக அரச உத்தியோகத்தர்களாகிய நமது அர்ப்பணிப்பு முழுமையான
நம்முடைய சேவைகளூடாக தேவைகளுடன் நம்மை நாடிவருகின்ற, நம்மையொத்த இந்த நாட்டின்
ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறப்பாக வழங்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். இந்த
நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளை அவர்களிடம்
கொண்டுசேர்க்கும் பொறுப்புமிக்க அரச பிரதிநிதிகள் நாம் என்பதை எப்போதும்
மனதில்கொண்டு சேவையாற்றவேண்டுமெனக் கூறியதோடு, இந்த நாட்டின் இறைமையைப்
பாதுகாப்பதை ஒவ்வொரு அரச உத்தியோகத்தரதும் தனது தலையாய கடமையாகக் கொள்வதோடு எமது
எதிர்கால சந்ததியினரையும் நாட்டுப்பற்றுள்ளவர்களாக வளர்க்கவேண்டும் எனவும் அங்கு
குறிப்பிட்டார்.
அதனையடுத்து
ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் காணிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி
உறுதிகளும் அனுமதிப்பத்திரங்களும் வழங்கும் நிகழ்வில் இலங்கை காணி ஆணையாளர் நாயகம்
திணைக்களத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், பிரதித்
திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களின் பிரசன்னத்துடன் ஆலையடிவேம்பு
பிரதேசத்திலுள்ள அதிகஷ்டப் பிரதேச குடியேற்றக் கிராமங்களான சாந்திபுரம், அளிக்கம்பை,
கண்ணகிகிராமம் ஆகிய கிராமங்களில் தமது அனுமதிப்பத்திரமுள்ள காணிகளின் உறுதிகளுக்காக
விண்ணப்பித்திருந்த 43 குடும்பங்களுக்கு இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையொப்பமிடப்பட்ட அளிப்பு(உறுதி)ப்பத்திரங்களும்,
அனுமதிப்பத்திரங்களின்றி நீண்டகால உரித்தைக் கொண்டிருந்த 7 காணி உரிமையாளர்களுக்கு
அனுமதிப்பத்திரங்களும் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.