யானை தாக்கி விவசாயி பலி

பொத்துவில் பல் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்டச்சென்ற விவசாயி, அதே யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பொத்துவில் – 27, ரசாக் மௌலானா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை முகைதீன் பாவா இப்றாஹீம் (வயது – 42) எனும் விவசாயியே இவ்வாறு உயிரிழந்தார்.
ஊர்ப்பகுதிக்குள் நேற்று (சனிக்கிழமை) இரவு நுழைந்த காட்டுயானையை விரட்டச் சென்ற அவரை, அவரின் வீட்டினருகே வைத்து குறித்த யானை தாக்கியுள்ளது.
இதனையடுத்து, ஆபத்தான நிலையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொத்துவில் பிரதேச குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி நுழைகின்றதால், மக்கள் தினமும் உயிர் அச்சுறுத்தலுடன் தமது நாட்களைக் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமது நிலை குறித்து தொடர்ந்தும் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்ற போதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.