ஆசிரியர் சேவையில் 30 வருடங்கள் தன்னை அர்ப்பணித்து சேவை நிறைவு காணும் ஆசிரியை செல்வி.சீனித்தம்பி நேசமணி





(சித்தா)

மட்/பட்/பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு ஆசிரியராக கடமையாற்றிய செல்வி சீனித்தம்பி நேசமணி ஆசிரியை அவர்கள் 30 வருட ஆத்மார்த்தமான ஆசிரியர் சேவையில் இருந்து தனது 60 ஆவது அகவைநாள் 2021.08.18 இன்று பணி நிறைவு காண்கின்றார்.

மட்டுமாநகரின் தென்னகத்தில் வெற்றிலைக் கொடி சூழ வேழமுகத்தான் சுயம்புருவாய் எழிலோச்சும் களுதாவளையில் சீனித்தம்பி பொன்னம்மா தம்பதியினருக்கு 1961.08.18 இல் ஜனனமாகி தனது ஆரம்பக் கல்வி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தினை களுதாவளை தேசியபாடசாலையில் நிறைவு செய்து கல்முனை உவெஸ்லி கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் தனது உயர் தரப்படிப்பினை நிறைவு செய்து தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பினைத்தொடர்ந்தார்.

1992.04.01 இல் ஆசிரியையாக முதல் நியமனத்தை தனது பிறந்த மண்ணில் அமைந்துள்ள பழம்பெரும் பாடசாலையான மட்/பட்/களுதாவளை இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் தனது கன்னிப் பணியைத் தொடர்ந்து 2003.02.23 வரை மாணவர்கள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தன்னிகரில்லா சாதனைபெற தூன்றுகோலாய் மிளிர்ந்தார்.



மட்/பட்/திருப்பழுகாமம் விபுலானந்தர் வித்தியாலயம், மட்/பட்/மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயம், மட்/பட்/களுதாவளை தேசியபாடசாலை என்பவற்றில் மனநிறைவான சேவையினை ஆற்றினார்.

ஓடுகின்ற நதி ஊரெலாம் வளம் சேர்ப்பது போல்' ஆசிரியர் சேவையும் அதுபோல் மகத்தானது 'பல்வேறுபட்ட மணவர் மனங்களை மதகுடைத்து பிரவகிக்கும் பேராறாய் கல்வியினை களமறிந்து விளைவிக்கும் பேராளர்களே! ஆசான்களாகும்' அந்த வகையிலே அவரின் கல்விப் பணியானது நில்லாது ஓடும் நதிபோல தனது சேவைக்காலத்தில் சாதாரண மாணவர்களை சாதனையாளர்களாக வடிவமைக்கும் சிற்பியாகவும், தனது ஆற்றலை, திறனை, மறுவிம்பமாக மாணவர்கள் மத்தியிலே தடம் பதித்து இன்று பணிநிறைவு காணுகின்றார்.

ஆசிரியை அவர்கள் தனது சேவைக்காலத்தில் மிகவும் நேர்த்தியான நேரமுகாமைத்துவத்தினையும், கடமையில் கடிகாரமாகவும், தாமாகவே முன்வந்து சேவையாற்றுபவராகவும், தன்னிலையில் இருந்து இறங்கி மாணவர் மனங்களில் என்றும் நீக்கமற நிற்பவராகவும் மிழிர்ந்தார். அந்த வகையிலே விளையாட்டு, இணைப்பாடவிதானம், கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை மாணவர் மனங்களில் விழுதாடச் செய்து நாளைய தலைமுறைக்கு நல்வித்திட்ட மனநிறைவுடன் இன்று பணிநிறைவு காண்கின்றார்.