வலி. வடக்கில் 34 வருடங்களுக்குப் பின் ஆலயத்தில் வழிபாடு செய்ய அனுமதி !



யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு பக்தர்கள் சென்று வழிபட, சுமார் 34 வருடங்களுக்குப் பின்னர், இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயங்களுக்குச் சென்று, பிரதி வெள்ளிக்கிழமைகளில் வழிபட இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி சில ஆலயங்களுக்கு பக்தர்களை இராணுவத்தினர் அழைத்துச் சென்றிருந்ததையடுத்து, நேற்று (01) கட்டுவான் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மானம்பிராய் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றுக்கும் அழைத்துச் சென்றிருந்தனர்.

நேற்று ஆலயத்துக்கு சுமார் 30 பேரை இராணுவத்தினர் தமது பேருந்துகளில் அழைத்துச் சென்று, ஆலய சூழலில் வழிபாடுகள் நடாத்தி வழிபட அனுமதித்தனர்.

பின்னர், மீண்டும் ஆலயத்தில் இருந்து மக்களை தமது வாகனங்களில் அழைத்துச் சென்று உயர்பாதுகாப்பு வலய எல்லை பகுதியில் இறக்கிவிட்டனர்.

இது தொடர்பில் பொதுமக்கள் கூறுகையில்,
கடந்த 1990ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதிகளில் இருந்து நாங்கள் வெளியேறிய பின்னர், 34 வருட காலமாக நாம் எமது சொந்த இடங்களுக்கு மீள திரும்ப முடியாதவாறு, எமது பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

34 வருடங்களின் பின்னர், ஆலய வழிபாட்டுக்கு அனுமதி வழங்கி, எம்மை அழைத்துச் சென்று ஆலயத்தில் வழிபடவிட்டு, மீண்டும் அழைத்து வந்துள்ளனர். மிக விரைவில் எம்மை நிரந்தரமாக சொந்த இடங்களில் மீள குடியமர்த்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.