இளைஞனை விபத்திற்குள்ளாக்கி தப்பிச் சென்ற வைத்தியர் !


மோட்டார் சைக்களில் பயணித்த இளைஞனை எதிரே வந்த வைத்தியர் ஒருவர் செலுத்தி சென்ற கார் மோதியதுடன் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், கல்முனை தலைமையக பொலிஸாரினால் கார் மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்தியரும் கைதாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (8) இரவு இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற இளைஞன் காயமடைந்த நிலையில், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, குறித்த விபத்தை ஏற்படுத்திய வெள்ளை நிற கார் தப்பி சென்ற நிலையில், அதே வைத்தியசாலை வளாகத்தில் தரித்து நின்றுள்ளது.

பின்னர் கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸாரினால் கார் மீட்கப்பட்டு அதை செலுத்தி சென்ற வைத்தியரும் கைதாகி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான வைத்தியர் என கூறப்படும் நபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்று வருவதுடன் விரிவான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த காரினை செலுத்திய வைத்தியருக்கு வாகன சாரதி அனுமதி பத்திரம் இல்லை எனவும் குடிபோதையில் காரினை செலுத்தி வந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில், கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.