.jpeg)
(பாறுக் ஷிஹான்)
நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல் மஸ்ஹர் வீதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(2) 32 வயதுடைய குறித்த குடும்பஸ்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 1000 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 750 மில்லி கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருளுடன் கைதான குறித்த சந்தேக நபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமாரவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்ரமரத்ன மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த சோதனையினை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












