மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் முதல்வரின் கணவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது



மட்டக்களப்பு நகரில் ஜஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் கணவனை 3 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை (8) அனுமதியளித்துள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது;

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஊழல் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (07) இரவு முதலியார் வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட  மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வரின் கணவரை 5 கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து அதிகாரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் தச்சு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூழாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை 250 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் சனிக்கிழமை (8) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது கைது செய்யப்பட்ட வியாபாரியை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதித்தார்.

அதனை தொடர்ந்து 250 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட தச்சு தொழிலாளி பிணையில் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.