
துப்பாக்கி வைத்திருப்பது என்பது ஆபத்தானது. இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட வரலாறுகளும் உண்டு. ஆகவே உறுப்பினர்கள் துப்பாக்கி கேட்டால் அதைப்பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்து சிறீலங்கா வான் படையின் குண்டு வீச்சில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட சு.ப தமிழ்ச்செல்வன் மற்றும் அவர்களோடு சேர்ந்து வீரச்சாவை தழுவிக்கொண்ட ஆறு 18ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வட்டார அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலும் ஞாயிற்றுக்கிழமை (02) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாட்டில் ஒரு அச்ச சூழ் நிலை உள்ளதாக ஜனாதிபதியே குறிப்பிடுகின்றார். நீதிமன்றம் வருபவர்களே சுட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிரதேச சபை தவிசாளர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்.
போக்குவரத்து பாதையில் கூட எதுவும் நடக்கலாம் என்ற அஞ்சம் உண்டு. அரசாங்கத்தின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை நாம் வரவேற்கின்றறோம். போதைப்பொருள் பாவணை என்பது தென்னிலங்கைக்கு மாத்திரம் அல்ல.வடமாகாணத்திலும் உள்ளது. இதனால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு அல்லது துப்பாக்கிகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. 2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக முதன் முதல் தெரிவு செய்யப்பட்டபோது எனக்கு துப்பாக்கி வழங்கப்பட்டது. அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்பு மீள ஒப்படைத்துள்ளேன்.
துப்பாக்கி வழங்கப்பட்டால் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். எவ்வளவு பாதுகாப்பு என்பதும் ஆராயப்படவேண்டும். இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே சுடுபட்ட வரலாறுகளும் உண்டு. துப்பாக்கி வைத்திருப்பது என்பது ஆபத்தானது.
உறுப்பினர்கள் கேட்டால் அதைப்பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும். அதன் பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. மக்கள் பிரதிநிதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுவரை நான் ஆயுதம் கோரவில்லை. எனக்கு அரசாங்கம் தந்தால் பயிற்சி தேவையில்லை என தெரிவித்தார்.












