திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் - கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு மீண்டும் விளக்கமறியல்


திருகோணமலை கடற்கரை பாதுகாப்பு வலயத்தில் அத்துமீறிச் சிலையமைத்த விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களும் இன்று புதன்கிழமை (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பௌத்த பிக்குகள் உட்பட பத்து பேருக்கும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான முக்கிய விபரங்கள் வருமாறு,

கடந்த 19 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மீளப் பெறுவதற்கு சட்டமா அதிபர் மற்றும் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை நகர கடற்கரைப் பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோதக் கட்டிடம் ஒன்றை அமைத்து பௌத்த சிலையொன்றை பிரதிஷ்டை செய்ததாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு கடந்த ஜனவரி 14 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதன்போது பெயரிடப்பட்ட 11 சந்தேக நபர்களில் 09 பேர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராகக் கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் அத்துமீறிய கட்டுமானங்களை மேற்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் விடயங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் சிறைச்சாலையினுள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்த போதிலும், பின்னர் அது தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.