அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் பிரதமர் இடையே சந்திப்பு



அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர் இன்று பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் பிரதமருடன் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி,
யாழ் சித்த மருத்துவ பீடத்தில் கடந்த 47 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய கட்டிடங்கள் மற்றும் விடுதி வசதிகள் விஸ்தரிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற வேண்டும். கல்வி அமைச்சு உடனடி மற்றும் நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், சித்த மருத்துவர்களுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்படாத நிலை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சித்த, ஆயுர்வேத, யூனானி மருத்துவங்களை விரிவாக அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்ததாக தெரிவித்தனர்.

தற்போது நாட்டில் 2011 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியோர் முதலாக 2,045 வேலையற்ற சித்த, யூனானி, ஆயுர்வேத மருத்துவர்களும் 1,187 உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்யாத பட்டதாரிகளும் இருப்பதாக கூறினர். அதேவேளை, ஐந்து மருத்துவ பீடங்களில் மொத்தமாக 2,708 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மட்டும் 104 மாணவர்கள் கடந்த ஒரு தசாப்த காலத்தில் பாடநெறியை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் தற்போதைய பதவிக்காலம் முடிவடையும் 2029ஆம் ஆண்டுக்குள், வேலைவாய்ப்பற்ற மருத்துவர்கள் எண்ணிக்கை 6,800 ஆகவும், கல்வி பயிலும் மாணவர்கள் 2,800 ஆகவும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். இதன் அடிப்படையில், மொத்தம் சுமார் 9,600 பேருக்கான தெளிவான தேசிய கொள்கையை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் வலியுறுத்தினர்.

சுகாதார அமைச்சின் செயலாளர் 2025 ஒக்டோபர் 9ஆம் திகதி, இது தொடர்பாக ஆரோக்கியமற்ற பதிலை எழுத்து மூலம் அறிவித்திருந்ததாகவும், இந்நிலை தொடருமானால் 2013ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதி இப்பாடநெறியை தேர்வு செய்தவர்கள் அரச வேலையைப் பெற 2033ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எதிர்கால மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் மற்றும் யோசனைகளை பிரதமரிடம் முன்வைத்ததாகவும், இது தொடர்பாக குழுவைன்றை நியமித்தி ஆராயுமாறும் கோரினர்.