வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் ; போத்தல்கள், கேன்களுக்கு அனுமதி இல்லை !


நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் அனைத்து நிலையங்களும் இந்தத் தொழில்நுட்ப முறைமையுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செல்லுபடியாகும் கியூ.ஆர் குறியீடு இருந்தாலும், போத்தல்கள், கேன்களில் எந்த காரணம் கொண்டும் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

முறையாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மாத்திரமே நேரடியாக எரிபொருள் விநியோகிக்கப்படும்.

கியூ.ஆர் குறியீட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனத்துடன் நுகர்வோர் வருகை தர வேண்டும். வேறொருவரின் குறியீட்டைப் பயன்படுத்தியோ அல்லது மாற்று வாகனத்தில் வந்தோ எரிபொருள் பெற முயற்சித்தால், எரிபொருள் வழங்கப்போவதில்லை என உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் சில நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்ட போதிலும், தற்போது முறைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த குமார ராஜபக்ஷ , புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் இன்னும் கியூ.ஆர் குறியீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கு அரசாங்கம் விரைவில் தீர்வை வழங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

"இந்த முறையைச் சரியாக அமுல்படுத்துவதில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. பொதுமக்கள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள எமது ஊழியர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.