
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் வரை, நாளை (18) முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் வாரத்தின் புதன்கிழமையை அரச விடுமுறை தினமாக அறிவித்தமை தொடர்பிலும் அமைச்சர் இங்கு விளக்கமளித்தார்.
விடுமுறை தினத்தைத் தெரிவு செய்யும் போது பல விருப்பத்தெரிவுகள் பரிசீலிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் விடுமுறை வழங்குவது அரச அலுவலகப் பணிகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அந்தத் தெரிவு நிராகரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அதற்குப் பதிலாக புதன்கிழமையை விடுமுறை தினமாக பெயரிடுவதன் மூலம், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளிலும் அரச அலுவலகங்களை இயக்க முடியும் எனவும், பொதுச் சேவைகளை முழுமையாக நிறுத்தாமல் முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்குத் தற்காலிக தீர்வாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரச அலுவலகங்கள் திறக்கப்படும் நாட்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், தற்போதுள்ள எரிபொருள் இருப்பைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதும், எதிர்கால நிச்சயமற்ற நிலைக்குத் தயாராவதும் இதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










.webp)

