எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. தற்போதைய நெருக்கடியான நிலைமையில் தேசிய மட்டத்தில் தயாரிக்கப்பட்ட விலைச்சூத்திரத்தை கொண்டு உலக சந்தையின் விலையை கணிப்பிட முடியாது என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
உலகச் சந்தையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டால் விலை சூத்திரத்தின்படி தேசிய மட்டத்தின்படி விலையை தீர்மானிக்க முடியும்.ஆனால் தற்போதைய இக்கட்டான நிலையில் விலை சூத்திரத்தின்படி விலையை தீர்மானிக்க முடியாது.
உலகச் சந்தையில் 70-78 டாலராக இருந்த ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 130 டாலராக உயர்ந்தபோது, அந்த மதிப்பை விலை சூத்திரத்தின்படி கணிப்பிட முடியவில்லை. அதன்படி இந்த விலை உயர்வு விலை சூத்திரத்தின்படி அமையவில்லை.
எரிபொருள் விலையேற்றத்தின் போது ஒட்டுமொத்த சுமையையும் மக்கள் மீது சுமத்தவில்லை. திறைசேரி 20 பில்லியன் ரூபாவை எரிபொருள் கொள்னவுக்காகவும், விலை முகாமைத்துவத்துக்காகவும் ஒதுக்கியுள்ளது.
எரிபொருள் விநியோக கட்டமைப்பை பாதுகாப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.தற்போதைய நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். கறுப்புச் சந்தையில் எரிபொருள் விற்பனை செய்வதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்




.webp)
.webp)







