வரிசைகளைத் தவிர்க்கவே QR நடைமுறை ; எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதி !


எரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் அவசர எரிபொருள் தேவை ஏற்பட்டால் அதனைப் பெற்றுக்கொள்வது குறித்து இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவை மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இன்று (15) காலை 6:00 மணி முதல் QR குறியீட்டு முறைக்கு அமைவாக எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னர் QR குறியீட்டைப் பெற்ற, அதே வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பழைய QR குறியீடு இருப்பின் அதையே பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

புதிதாக QR குறியீட்டைப் பெற வேண்டியவர்கள் https://fuelpass.gov.lk/ என்ற இணையதளத்தின் மூலம் அதனைப் பதிவிறக்கம் செய்யலாம்.

வாகன உரிமையாளர் மாற்றம், தொலைபேசி இலக்க மாற்றம் அல்லது புதிய பதிவுகளுக்காக அந்த இணையதளத்திலுள்ள 'Vehicle Registration' பகுதி இன்னும் ஒரு மணித்தியாலத்திற்குள் புதுப்பிக்கப்படும் (Update) என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினத்திலிருந்து QR குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த பணிப்பாளர் மேலும் கூறுகையில்:

"கடந்த சில நாட்களாகப் பலரும் எரிபொருளைச் சேமித்து வைப்பதையும், ஊடகச் சந்திப்புகள் மூலம் எரிபொருள் வரிசைகளை உருவாக்குவதையும் அவதானித்தோம். இதனால் ஒரு அபாயகரமான நிலை ஏற்படலாம் என்பதால் தான் QR முறையை மீண்டும் கொண்டுவந்தோம். மற்றபடி எரிபொருளுக்குப் பிரச்சினை இல்லை. எவரும் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்" எனத் தெரிவித்தார்