கடந்த ஆண்டில் 10,000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு


2025ஆம் ஆண்டில் மாத்திரம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 10,000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் இன்று திங்கட்கிழமை (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் தகவல் பணிப்பாளர் ஷானிகா மலல்கொட, கடந்த ஆண்டில் மாத்திரம் மொத்தம் 10,455 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவற்றில் 2,099 முறைப்பாடுகள் சிறுவர்களுக்கு எதிரான கொடூரமான நடத்தைகள் தொடர்பில் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டின் பெப்ரவரி 28ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பில் மாத்திரம் 11,409 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.

சிறுவர்கள் எவரேனும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு அல்லது தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுவதை அவதானித்தால் அல்லது அது குறித்துத் தெரியவந்தால், உடனடியாக அதிகார சபைக்கு அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்காக 1929 என்ற சிறுவர் உதவி இலக்கத்திற்கு எந்த நேரத்திலும் இலவசமாக அழைத்து முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.