
இலங்கையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, தடையின்றி உரங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அனைத்து விவசாய சேவை நிலையங்களையும் வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க இந்த விடயம் தொடர்பாக விடுத்துள்ள விசேட அறிக்கையில், விவசாயிகள் எவ்வித சிரமமுமின்றி உரங்களைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்ற நிலை காரணமாக, எதிர்காலத்தில் உர விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. அத்துடன், சில தரப்பினர் உரங்களை சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்க முயற்சிப்பதாகக் கிடைத்துள்ள தகவல்களைத் தொடர்ந்து, உர விநியோகத்தை ஒழுங்குபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, நெற்செய்கைக்கு அவசியமான உரங்களை தனியார் வர்த்தக நிலையங்கள் ஊடாக விநியோகிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி, அரச விவசாய சேவை நிலையங்கள் ஊடாக மாத்திரமே விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



.jpg)








