பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4 - 5 மாதங்களுக்குள் நிறைவடையும் ; கண்டி வரையான ரயில் சேவைகள் விரைவில் ஆரம்பம்! - ரயில்வே திணைக்களம்


 பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுக்கும் பணிகள் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே திணைக்களத்தின் தலைமைப் பொறியியலாளர் பிரியந்த தீகல விடுத்துள்ள அறிவிப்பின்படி,

பேராதனை ரயில்வே பாலத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் 4 முதல் 5 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் பாலத்தின் அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவு செய்யப்படும்.

இதன் மூலம் மலையக ரயில் பாதையில் கண்டி வரையிலான ரயில் சேவைகள் மிக விரைவில் நிச்சயமாக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

மாத்தளைக்கான ரயில் பாதை மற்றும் கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி வரையான ரயில் பாதைப் பகுதிகள் மிகவும் சவாலானவையாகக் காணப்படுகின்றன.

இப்பகுதிகளுக்குச் செல்வதற்கான பிரதான வீதி இணைப்புகள் இல்லாததால், பணிகளைத் தரைவழியாகக் கொண்டு செல்வது கடினமாக உள்ளது. இதன் காரணமாக, ஒவ்வொரு பகுதியாக மெதுவாகப் பணிகளை முன்னெடுக்கவேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"மேலும், பதுளை வரையான முழுமையான ரயில் பாதைகளையும் 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் முழுமையாக மீட்டெடுக்க உத்தேசித்துள்ளோம். புதிதாக ஒரு ரயில் பாதையை அமைப்பது எளிதானது. ஆனால் பழைய பாதையை மீண்டும் புனரமைப்பது மிகவும் கடினமான காரியம். அதற்கான பணிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம்" என தலைமைப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வத்தேகமவிலிருந்து உக்குவலை வரையான 3 முதல் 4 கிலோமீட்டர் வரை கரடுமுரடான நிலப்பகுதி காணப்படுவதோடு கடந்த காலத்தில் இப்பகுதிகள் முறையான மண் பாதுகாப்பு கட்டமைப்புகள் இன்றி அமைக்கப்பட்டிருந்ததால், தற்போது நவீன பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி இப்பாதைகள் மறுவடிவமைப்பு செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.