
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரியின் மீது 50 சதவீதம் கூடுதல் வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய திருத்தங்களின்படி, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இதுவரை காலமும் விதிக்கப்பட்டிருந்த 30 சதவீத சுங்க இறக்குமதி வரியின் மீது, மேலும் 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது.
இந்த புதிய வரி விதிப்பு இன்று சனிக்கிழமை (16) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அடுத்த 3 மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், நேற்று வெள்ளிக்கிழமை (15) அல்லது அதற்கு முன்னர் நாணய கடிதங்கள் திறக்கப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த புதிய 50 சதவீத கூடுதல் சுங்க வரி விவகாரம் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் வெளிநாட்டு கையிருப்பை கருத்திற்கொண்டே இந்த தற்காலிக வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.










.jpeg)

